திங்கள், 16 ஆகஸ்ட், 2010

யாழ் நகரில் சிங்கள வர்த்தகர்களுக்கு வாள் வெட்டு.


தென்னிலங்கையில் இருந்து யாழ் செல்லும் சிங்கள வர்த்தகர்கள் அதிகரித்துள்ள நிலையில் இன்று 3 சிங்கள வர்த்தகர்களை, தலைக்கவசம் அணிந்து முகத்தை கறுப்பு துணியால் மறைத்து மோட்டார் சைக்கிளில் வந்தோர்  கத்திகளால் வெட்டியும் அவர்கள் வந்த லொறியினை எரித்துவிட்டும் தப்பிச் சென்றுள்ளனர்.

தென்னிலங்கையில் இருந்து வியாபார நோக்கத்திற்காக யாழ் சென்றிருந்த மூன்று சிங்களவர்களே இனந்தெரியாதோரால் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளனர்.

மேற்படி சம்பவம் இன்று மாலை 7:30 மணியளவில்  யாழ்ப்பாண ஆரியபாதம் வீதி அம்பட்ட பாலத்திற்கு அருகில் இடம்பெற்றது.

கத்திக்குத்துக்கு உள்ளாகிய சிங்கள வர்த்தகர்களுள் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் ஏனைய இருவரும் பலத்த காயங்களோடு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  எரிந்த நிலையில் இருந்த லொறியினை விரைந்து வந்த இராணுவத்தினர் அணைத்துவிட்டனர்.

இதனையடுத்து அப்பகுதியில் ஏராளமான இராணுவத்தினர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வீதிக்கான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் மிகவும் பதட்ட நிலை நிலவுவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் மூலம்  தெரியவருகின்றது.

தளபாட வியாபாரிகள் தம் விற்பனையை முடித்துவிட்டு லொறிக்குள் இருந்த சமயத்திலேயே இவ் இனந்தெரியாதோர் அலவாங்கு, வாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சிங்கள வர்த்தகர்களை தாக்கி, இனிமேல் இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு வியாபாரம் என்ற நோக்கில் வரக்கூடாது என சிங்களத்திலேயே சரளமாக திட்டியுமுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக