சனி, 18 செப்டம்பர், 2010
ஐ.நா தலைமைச் செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு தனது பணிகளை ஆரம்பித்துள்ளது.
இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு சுமத்தும் வழி முறைகள் குறித்து ஐ.நா தலைமைச் செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு தனது பணிகளை ஆரம்பித்துள்ளதாக ஐ நா அறிவித்துள்ளது.
ஐ நா தலைமைச் செயலருடனான சந்திப்பு ஒன்றை அடுத்து இந்தக் குழு தனது பணிகளை ஆரம்பித்திருப்பதாக, ஐ நா தலைமைச் செயலர் பான் கீ மூனின் சார்பில் பேசவல்ல அதிகாரி தெரிவித்துள்ளார்.
இலங்கைப் போரின் இறுத்திக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஆலோசனை கூறுவதற்காகவே இந்தக் மூன்று பேர் கொண்ட குழு கடந்த ஜூன் மாதத்தில் நியமிக்கப்பட்டது.
இந்தக் குழுவின் நியமனத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அதன் உறுப்பினர்கள் இலங்கைக்குள் வர அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்திருந்தார்.
இந்தக் குழுவை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி இலங்கையின் மற்றுமொரு அமைச்சரான விமல் வீரவன்ஸவும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியிருந்தார். ஆனால், அதனை அவர் பின்னர் கைவிட்டார். இந் நிலையில் ஐ.நா.வின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக