சனி, 21 ஆகஸ்ட், 2010
இலங்கை மீனவர் குழுவிற்கு தலைமை தாங்க முற்பட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் தலைவருக்கு இந்தியா தடை!
தற்போது தமிழ்நாட்டிற்கு சென்றிருக்கும் இலங்கை மீனவர்களின் குழுவுக்கு தலைமை தாங்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்த யாழ்மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் தலைவர் சின்னையா தவரட்ணம் இந்தியா செல்வதற்கு இந்திய அரசு அனுமதி தர மறுத்து விட்டது.
இதனால்தான் தன்னால் இந்த பயணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று தவரட்ணம் தெரிவித்து்ளளார்.
இப்போது மட்டுமல்லாமல், 2006 ஆம் ஆண்டும் தாம் இதே போல இந்தியா வர அனுமதி கேட்டதாகவும், அப்போதும் தமக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறும் தவரட்ணம் இதற்கான காரணம் என்ன என்று தமக்கு விளங்கவில்லை என்றும் கூறுகிறார்.
இந்திய இலங்கை மீனவர்களுக்கிடையிலான புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கான முயற்சியாக இருநாட்டு மீனவர்களையும் நேரடியாக சந்திக்க வைத்து அவர்களின் பிரச்ச்சினைகளை பேசி தீர்க்கும் முயற்சியாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பயணத்திற்கு தலைமை தாங்குவதாக அறிவிக்கப்பட்ட தமக்கு அனுமதி மறுக்கப்பட்டது தமக்கு வேதனையளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னணி தலைவராக அறியப்பட்ட கேபி எனப்படும் குமரன் பத்மனாதன் அவர்கள் அமைத்திருக்கும் வடகிழக்கு புனர்வாழ்வுக்கவுன்சிலின் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டிருப்பதன் காரணமாக இவருக்கு இந்தியா அனுமதி மறுத்திருக்கக்கூடும் என்று வெளியான ஊடக செய்திகளை தவரட்ணம் மறுத்தார்.
குமரன் பத்மநாதன் தமது சகோதரர் என்றும், தனது மீனவர் சமுதாயத்தை மேம்படுத்துவதற்கான உதவிகளை செய்யும் எந்த நபருடனும், அமைப்புடனும் சேர்ந்து செயற்பட தாம் தயாராக இருப்பதாகவும், அதற்கு அரசியல் பின்னணி எதுவும் இல்லை என்றும் கூறிய தவரட்ணம், கே.பி.யுடனான தனது சந்திப்புக்கள் அனைத்தும் இலங்கை அரசின் அனுமதியுடனே செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்..


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக