இலங்கை தமிழ் அகதிகள் விடயத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நடைமுறைகள் தவறானவை என்று சுட்டிக்காட்டியுள்ள அந்நாட்டு உயர் நீதிமன்றம், அதன் காரணமாக அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் மேன்முறையீடு செய்வதற்கும் சிபார்சு செய்துள்ளது.
அவர்களில் ஒரு சிலர் கடந்த ஒக்டோபரில் கிறிஸ்மஸ் தீவை வந்தடைந்தவர்கள் என்றும், அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட நிலையில் நாடு கடத்தப்பட இருந்தார்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
அவ்வாறான நிலையில் மனிதாபிமானம் கொண்ட சில வழக்கறிஞர்கள் குறித்த விடயத்தை நீதிமன்றம் வரை கொண்டு சென்ற நிலையில் அநீதியிழைக்கப்படுவதிலிருந்து ஈழத் தமிழ் அகதிகள் தப்பித்துக் கொள்ள முடிந்துள்ளது.
பிரஸ்தாப அகதிகள் மேன்முறையீடு செய்யும் பட்சத்தில் அவர்களின் அகதி அந்தஸ்து ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக நம்பப்படுகின்றது.
அத்துடன் அகதி அந்தஸ்து கோருவோரை கிறிஸ்மஸ் தீவுகளில் தடுத்து வைத்து விசாரிக்கும் அவுஸ்திரேலிய அரசாங்க நடைமுறையையும் அந்நாட்டு நீதிமன்றம் சாடியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக