
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின்பு நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் விடுதலைப்புலிகளின் ஆதரவுபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் தாயகமாம் வடக்குக் கிழக்கு மாநிலங்களில் பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்துக்கு 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விடுதலைப்புலிகள் ஆதரவுடன் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 22 இடங்களில் வெற்றிபெற்றது.
தனித்தமிழீழமே தீர்வு என்று 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தந்தை செல்வா அவர்கள் நிறைவேற்றிய தீர்மானத்திற்குப் பின்னர், 1977ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் வடக்குக் கிழக்கு மாநிலங்களில் 90 வீத தமிழர்கள் அந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர். அதேபோலத்தான் இப்போது உள்ளூராட்சித் தேர்தல்களிலும் தமிழீழ ஆதரவாளர்களையே தேர்ந்தெடுத்தெருக்கிறார்கள். இது தமிழீழம் அமைவதற்கான முன்னோடித் தேர்தல் முடிவுகள் என்றே கொள்ளவேண்டும்.
எனவே உலகநாடுகளின் பார்வையாளர்கள் முன்னிலையில் தமிழீழம் அமைப்பதற்கான வாக்குப்பதிவை நடத்திட வேண்டும். அந்த வாக்குப்பதிவில் உலகின் பல நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள ஈழத்தமிழர்கள், அந்தந்த நாடுகளிலே வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.
இலங்கையில் தமிழ் இனக்கொலை நடத்திய ராஜபக்ஷ மற்றும் அவரது கூட்டாளிகளை உலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் கூண்டில் நிறுத்தித் தண்டிப்பதற்கும் நடவடிக்கைகளை ஐ.நா.மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன் என வைகோ கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக